×

மகாராஷ்டிராவில் மருத்துவமனை டீனை கழிவறை சுத்தம் செய்ய வைத்த எம்பி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சுகாதார துறை படுமோசமாக இருப்பதை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அம்பலப்படுத்தியது. அதாவது மாநிலத்தில் உள்ள நாந்தேட்டி பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 2 நாளில் 31 நோயாளிகள் போதிய மருந்து வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் பிறந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூரத்தை மருத்துவமனையின் டீன் வெளியே சொன்ன பிறகுதான் உண்மை தெரியவந்தது.

இந்நிலையில் மருத்துவமனை டீன் ஷ்யாம் ராவ் வகோடாவை வலுக்கட்டாயமாக ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த ஹேமந்த் பாட்டீல் எம்பி, கழிவறையை சுத்தம் செய்ய சொல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில மருத்துவர்கள் சங்கம், ‘அரசியல் ஆதாயத்துக்காக ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவமனை டீனை கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளது.

பின்னர் மருத்துவமனை டீன் கொடுத்த புகாரின் பேரில் ஹேமந்த் பாட்டீல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவமனை டீனை வலுக்கட்டாயமாக கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மகாராஷ்டிராவில் மருத்துவமனை டீனை கழிவறை சுத்தம் செய்ய வைத்த எம்பி appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,BJP ,Eknath ,Shinde ,Dinakaran ,
× RELATED மும்பையில் வாக்குச் சாவடி...